மும்பை, ஜுலை 23 - ஆட்சி அதிகாரத்தின் துணையுடன் அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழு சார்பில் மும்பையில் கருத்தரங்கம் நடந்தது. வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கப்பட்ட பலர் இதில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு ஜுன் மாதம் ரயிலில் கொல்லப்பட்ட ஜுனைத் கானின் சகோதரர்கள், மோடி ஆட்சிக்கு வந்த உடன் 2014ல் புனேயில் கொலை செய்யப்பட்ட முக்ஷின் சேக்கின் குடும்ப உறுப்பினரான ஷாநவாஸ் சேக், லத்தூரில் சாதி ஆதிக்க வெறியர்களால் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு இரையாக்கப்பட்ட தலித் இளம்பெண் சத்யபாமா, அகமத் நகரில் சாதி ஆதிக்க வெறியர்களால் கொலை செய்யப்பட்ட தலித் மாணவர் நிதின் அகேயின் தந்தை ராஜு அலே, குஜராத் வன்முறை தாக்குதலின்போது சங்பரிவாரின் கொலை வாளை எதிர்கொண்டு அச்சம் நிரம்பிய பார்வையுடன் கைகூப்பி நின்ற படத்தின் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவரும் பின்னர் மனநோய்க்கு உள்ளானவருமான அசோக் மோச்சி ஆகியோர் பங்கேற்றனர்.
அசோக்கின் தம்பி சதீஷ்
இதுபோல் அகமதாபாத்தில் பசுக்குண்டர்கள் கொலை செய்த அயூப் மேவாயின் சகோதரர் ஆரிப் மேவாத்தி, குஜராத் மாநிலம் உனாவில் சாதி ஆதிக்க வெறியர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்கள் வைஷ்ராம், அசோக் சர்வய்யா, பியூஸ் சர்வய்யா, கடந்த மாதம் திருநெல்வேலியில் சாதி ஆதிக்க வெறியர்களால் கொல்லப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் அசோக்கின் சகோதரர் சதீஷ் உள்ளிட்டோர் கருத்தரங்கத்தின் முதல் அமர்வில் பங்கேற்றனர். உத்தரப்பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சுதோய் குமார் சிங்கின் மனைவி ரஜனி சிங் உடல்நிலை காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்றவில்லை என்றாலும் தனது ஒருமைப்பாட்டை தெரிவித்து அவர் அனுப்பியிருந்த செய்தி கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால் கவுடா, திரைக் கலைஞர் நஸ்ருதீன் ஷா, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட், சமூக செயற்பாட்டளர்களான சுபாஷினி அலி, டாக்டர். ராம் புனியானி, டீஸ்டா செதல்வாத், மரியம் தாவ்லே, சைலேந்திர காம்ப்ளே, ஊடக செயற்பாட்டாளர்களான பிரதிமா ஜோசி, கலீம் சித்திக் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த கூட்டியக்கத்தில் பங்கேற்றனர்.